புத்தகங்கள்
இப்போது எழுதும் பதிவுகள் எல்லாம் அசின் சாராலோ, ரஞ்சித்தாலோ தூண்டி விடப்பட்டதால் எழுதப்படுகின்றன .
அதனால் என்ன ? ஆசிரியரும் நண்பரும் நம்மைத் தூண்டிவிட்டு வழிநடத்துபவர்கள் தானே. இன்று ரஞ்சித் புத்தகங்கள் பற்றி எழுதியதைப் படித்தபோது பல்வேறு நினைவுகள்.
மறக்கமுடியாததைச் சொல்கிறேன். அசின் சார் வீட்டில் ஒரு அருமையான நூலகம் உண்டு. இலக்கியம் தவிரவும் பல தரப்பட்ட Subject Books . பழைய சுபமங்களா இதழ்கள்.
ஏராளமான காமிக்ஸ் புத்தகங்களை எனக்கே கொடுத்திருக்கிறார். வீட்டு நூலகம் தான் , என்றாலும் அவற்றை அட்டவணைப்படுத்த விரும்பி புத்தகங்களை பைன்ட் செய்து லேபில் ஒட்டி நூலின் பெயர் , ஆசிரியர் பெயர் எல்லாம் எழுதி வைக்கும் பணியை எங்களிடம் கொடுத்தார்.
நான் , சதீஷ் குமார் , கணேஷ் குமார் இன்னும் சில நண்பர்கள் உற்சாகமாக அவற்றைச் செய்தோம். ஒரு வகையில் அத்தனை புத்தகங்களை , இலக்கியவாதிகளின் பெயர்களை இப்படித்தான் பரிச்சயப்படுத்திக்கொண்டோம். பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்று பார்த்தால் கூட எது யாருடைய கையெழுத்து என்று என்னால் சொல்லிவிடமுடியும்.
தரமான எழுத்தை மட்டும் தான் படிப்பது என்ற கொள்கை கொண்ட நீதிமாணிக்கம் சார் இன்னுமொரு தூண்டுதல் .
இப்போது விஷயத்திற்கு வருகிறேன். அசின் சாரிடம், ” இத்தனை புத்தகங்களை ஏன் வாங்க வேண்டும் , நம்ம ஊர் லைப்ரரிலே மெம்பர் ஆனாப்போதுமே ” என்றேன்.
அவர், ” சட்டம் , நல்ல புத்தகங்கள் எப்பவும் கூடவே இருக்கணும். லைப்ரரிலே மிஞ்சிப்போனா நாலு புக் எடுக்கலாம் , அதுலயும் முக்கியமான புக்கை Reference Section ல வச்சிருப்பாங்க. நமக்கு நேரம் கிடைக்கும் போது விரும்புன புத்தகம் கையில இருக்காது . அதனால முக்கியமான புத்தகங்கள் நம்ம வீட்டிலேயே இருக்கறதுதான் வசதி ” என்று சொல்லி விட்டு ,
” புத்தகங்கள் மட்டும் தான் நமக்கு நல்ல நண்பர்களாக இருக்க முடியும் . நல்ல நண்பர்கள் என்று நாம் நினைக்கும் மனிதர்கள் சிலசமயம் நம்மைப் புண்பட வைக்கும் சொற்களைப் பேசிவிடுவார்கள் , செயல்களைச் செய்துவிடுவார்கள். ஆனால் ஒரு நல்ல புத்தகம் எப்போதும் நல்ல விஷயங்களையே பேசும் , நம்மை உற்சாகப்பட வைக்கும் , காயப்படுத்தாது “ என்றார்.
இது என் மனதில் தங்கி விட்டது.
இது நடந்தது நான் பள்ளியில் படிக்கும் போது . ஒருநாள் அரசு நூலகத்திற்குப் போய்விட்டு வரும் போது என்னோடு படிக்கும் ஒரு மாணவன் எதிர்ப்பட்டான். அவனுக்கு சம்பகுளமோ , சாயமலையோ . ஆனால் கழுகுமலைக்கு தெக்க தான் .
இப்ப பெயர் மறந்துவிட்டது , முகம் ஞாபகத்தில் இருக்கிறது . ஆனால் காமர்ஸ் க்ரூப்காரன் . ” என்னடே எப்பவும் படிப்பு தானா , அப்படி என்ன தான் இருக்கு அந்தப் புத்தகத்திலே ” என்றான்.
அவனுக்கு நான் அசின் சார் சொன்னதைச் சொன்னேன். புத்தகம் தான் நமக்கு நல்ல நண்பனாக இருக்கமுடியும் என்று . அவன் ஒன்றும் சொல்லவில்லை , விடைபெற்றுப் போய்விட்டான் .
பிறகு நான் எஞ்சினியரிங் முடித்து , திருச்சியில் சிதார் வெசல்சில் வேலைக்குச் சேர்ந்து விட்டேன் . ஊருக்கு வந்த ஒருமுறை அவன் எதிர்ப்பட்டான் .
வழக்கமான நலம் விசாரிப்புகள் . கொஞ்சநேரம் பேசாமல் நின்றோம் . நான் கிளம்பத் தயாரானேன்.
” சட்டநாதா , நீ ஒருவாட்டி சொன்ன , ஞாபகத்தில் இருக்கா ? புத்தகம் தான் நமக்கு நல்ல நண்பன் , கூடப் படிக்கிற பசங்க கூட நம்மளை ஏதாவது திட்டிரலாம் , வஞ்சிரலாம் . ஆனால் ஒரு நல்ல புத்தகம் எப்பவும் நம்மிடம் நல்ல வார்த்தைகளையே பேசும்னு ” என்றான் .
ஆச்சரியம் அடைந்தேன், அவனிடம் இதைச்சொல்லி ஆறு , ஏழு வருசங்கள் இருக்கும் .
” அதை அசின் சார் ஒருவாட்டி சொன்னாரு ” என்றேன் .
” ஆனால் எப்பவாவது புத்தகங்கள் பற்றிப் பேசும் போது , நீ சொன்னதுதான் ஞாபகத்துக்கு வரும் ” என்றான் .
என்னை அந்த ஒரு வாக்கியமாக மட்டும் தான் அவன் நினைவில் வைத்திருக்கிறான். என்னைப் பற்றிய வேறு எந்த தகவலும் அவனுக்கு முக்கியம் இல்லை .
புத்தகங்கள் இப்படித்தான் வாழ்கின்றனவா ?